Monday, February 15, 2016

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள தமிழர்!

வாஷிங்டன் – அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆன்டோனின் ஸ்கோலியா அண்மையில் காலமானதையடுத்து, அப்பதவிக்கு புதிய நீதிபதியாக இந்தியர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் நியமிக்கப்படவுள்ளார்.
ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசனின் குடும்பம் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டது.
அவரது தந்தை பத்மநாபன்  நெல்லை மாவட்டம் மேலதிருவேங்கடநாதபுரத்தை சேர்ந்தவர். தாயார் சென்னையைச் சேர்ந்தவர்.
என்றாலும், சண்டிகரில் தான் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் பிறந்து வளர்ந்துள்ளார்.
கடந்த 1960-ம் ஆண்டு, ஸ்ரீகாந்தின் குடும்பம் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தது. அங்கு தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த அவர், அந்நாட்டிலேயே வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். தற்போது கொலம்பியா மண்டல மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் நீதிபதியாக உள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீகாந்த் ஏற்கவுள்ள புதிய பொறுப்பு குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு அறிவிக்கப்பட்டால், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாகப் பொறுப்பேற்கும் முதல் இந்தியர் மற்றும் தமிழர் என்ற பெருமை ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசனிற்குக் கிடைக்கும்.

Source : http://www.selliyal.com/archives/122101

No comments: